ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
பள்ளிச் செயல்பாடுகளும், தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவு விழா

2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும். காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் திரு. சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பி ரஞ்சித் அவர்கள், தலைமை ஆசிரியை திருமதி ஷைலஜா என்.கே அவர்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு.சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

வரவேற்க மிக்கி மௌசும், பியரும்

இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு திருமதி. சுப்ரபா ஆசிரியை அவர்களுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா.


ஜூலை

அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்

மனித குலத்தின் மாபெரும் வெற்றிக்கு ஐம்பது வயது. மனிதன் சந்திரனில் அடி எடுத்து வைத்த வரலாற்று சாதனையை நினைவுபடுத்திக் கொண்டு சந்திர தினத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். அரசு விக்டோரியா உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான திருமதி. ரோஷ்ணா அவர்கள் குழந்தைகள் மனதில் அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கான அடிப்படையிட்டு, அறிவியல் குழுவைத் துவங்கி வைத்தார். மெழுகுவர்த்தியை சூடாக்கும் போது ஏற்படுகின்ற விந்தையான மாற்றத்தையும், பொட்டாசியமும், கிளிசரினும் சேரும்போது தீப்பிடிக்கும் வினையையும் குழந்தைகளை உற்று நோக்கச் செய்து, நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் இன்றியமையாமையை உணர்த்தினார் திருமதி. ரோஷ்ணா அவர்கள். மேலும் பல்வேறு ஆர்வமூட்டும் சோதனைகளும் செய்து காண்பித்து அதற்கான விளக்கங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் போன்றவர்களது வேடமணிந்து வந்த குழந்தைகள் தங்களை சுய அறிமுகம் செய்தனர். அந்தப் புகழ்மிக்கவர்களைப் பற்றி கூடுதல் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். நிலாவைப் பற்றிய பாடல்கள் அப்போளா - 11 மற்றும் ராக்கெட்டின் மாதிரிகள் காண்பித்தல், பேச்சுப்போட்டி, விடுகதைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சந்திர யாத்திரையைக் குழந்தைகள் முன் கொண்டுவர சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் திருமதி. ஷைலஜா அவர்கள் துவக்க உரையும், ஆசிரியர் திரு . ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூறினார்.


பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை திருமதி ஷைலஜா அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கற்றலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், டிவி பார்த்தல் குழந்தைகளது கற்றலை பெரிதும் பாதிக்கிறது என்றும் தலைமையாசிரியை கூறினார். மேலும் எல்.எஸ்.எஸ் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதற்காக பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கின்ற பயிற்சிகளையும் தெளிவாக பெற்றோர்களுக்கு விளக்கினார். பின்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையுள்ள வரவு, செலவு கணக்குகளும், செயல்பாட்டு அறிக்கையும் வாசித்தார். பிறகு பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான கலந்துரையாடலில் பங்கேற்க அனைத்து பெற்றோர்களுக்கும், வாய்ப்பளிக்கப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் கற்றல் காரியங்களிலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கான காரியங்களிலும் கருத்துக்கள் பரிமாறினர். பிறகு புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரான திரு. சாமிநாதன் அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், துணைத் தலைவராக திரு. ஸ்ரீஜித் சி.ஐ அவர்களும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் நிர்வாகச் சங்கமும், மதர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவெடுத்தது.


ஆகஸ்ட்

ஹிரோஷிமா, நாகசாகி தினம்

நமது பள்ளியில் ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினமும், ஆகஸ்ட் 9 நாகசாகி தினமும் நினைவுகூறப்பட்டது. மனித குலத்திற்கே நாசம் விளைவிக்கின்ற யுத்தங்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பெரும் நஷ்டங்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற தினக் கொண்டாட்டங்கள் பெரிதும் துணைபுரிகிறது. இந்த தினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. அணுகுண்டு வெடித்ததினுடையவும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், இப்போதும் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் தெரிந்து கொள்வதற்காக சில வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு நெஞ்சை தொட்ட ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உற்சாகமான முறையில் நடத்திய ஹிரோஷிமா, நாகசாகி வினாவிடைப் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி ரிது.எஸ்.எம் முழு மதிப்பெண்களும் பெற்று வெற்றி அடைந்தாள். நிரஞ்சன். எம் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீலக்ஷ்மி. ஆர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியோடு தொடர்புடைய படங்களும் விபரங்களும் உட்படுத்தி குழந்தைகள் பதிப்புகள் தயாராக்கி வந்தனர். மேலும் பிளக்கார்டுகளும் உருவாக்கினார்.

சுதந்திர தினம்

புத்துணர்வுடன் இவ்வருடத்தில் நமது 73 -ஆம் சுதந்திர தினம் மிக நல்ல முறையில் கொண்டாடினோம். முன் வருடங்களை ஒப்பிடும்போது குழந்தைகள் குறைவாக இருப்பினும் பெற்றோர்கள் நிறைய பேர் பங்கேற்றனர் என்பதை மிக என்பது மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. சரியாக காலை 9 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சாமிநாதன் அவர்கள் கொடி ஏற்றினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா ஆசிரியை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சாமிநாதன், வார்டு கவுன்சிலர் திரு.மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.ஸ்ரீஜித், முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ரஞ்சித், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாக உறுப்பினர் திரு. சசிகுமார், திரு. ரூபேஷ் போன்றவர்கள் குழந்தைகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை வழங்கினார்கள். பின்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுதந்திர தின பதிப்புகள், பேச்சுப்போட்டி, கதைகள், கவிதைகள், மாறுவேடம், தேசபக்திபாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அனைத்து வகுப்பினருடையவும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று மேம்பட்டதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் புதுமையானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும் என்பது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கே உடைய ஒரு தனிச் சிறப்பாகும். நமது பள்ளி செயல்படுகின்ற நகரசபை முழுமையாக பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சுதந்திர தின நந்நாளில் யாவரும் மாதிரி ஆக்க வேண்டிய ஒரு சிறப்பான செயல்பாட்டை முன்வைத்தோம். இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தந்தையான திரு. பாபு அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வித்துக்கள் வைத்த கொடிகள் வழங்கினார். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கின்ற இந்த நல்ல எண்ணத்தை அனைவரும் பாராட்டி பெருமைப்படுத்தினர். பாரதமாதாவுடையவும், ஜவஹர்லால் நேருவுடையவும் வேடமணிந்த குழந்தைகள் சுதந்திர தினத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆசிரியர் பயிற்சிக்காக வந்த மாணவர்களது தேசபக்தி பாடல் நன்றாகவே இருந்தது. பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு இவ்வருட சுதந்திர தினக் கொண்டாட்டமும் மிக நல்ல முறையில் கொண்டாடி மகிழ்ந்தோம்.