ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வரலாறு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

வரலாறு

உருவாக்கம்

சித்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொங்கன் படையின் நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். 01.06.1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த சித்தூரில் விக்டோரியா பெண்கள் பள்ளிக்கூடம் செயல்படத் துவங்கியது. அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணி விக்டோரியா மகாராணியாக இருந்தார். அவரது நினைவாகவே பள்ளிக்கு விக்டோரியா எனப் பெயரிடப்பட்டது.

வளர்ச்சி

முன்காலங்களில் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முதல் தலைமை ஆசிரியை கௌரி பவித்ரன் பல வருடங்கள் இங்கே பணிபுரிந்தார். அப்போது இலவசக்கல்வி இருக்கவில்லை. அக்காலத்தில் பெண் குழந்தைகள் மிகக் குறைவாகவே இருந்தனர். 1947 ஆகஸ்ட் 17ஆம் தேதி பள்ளிக்கட்டிடம் சித்தூர் அரசு கல்லூரிக்காக விட்டுக்கொடுக்கப்பட்டது. அப்போது நமது பள்ளிக்கூடம் உபமாவட்ட கல்வி அலுவலகத்தில் செயல்பட்டது. அன்று கண்ணாடி பள்ளி என்ற பெயரில் அறியப்பட்டது. 1953இல் மறுபடியும் பழைய கட்டிடம் நமது பள்ளிக்கு கிடைத்தது. முன்காலங்களில் பள்ளிக்கு சீருடை இருக்கவில்லை. அரசாங்கத்தின் துணையோடு சீருடை கொண்டுவரப்பட்டது. தேசிய கொடி போன்று பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற ரிப்பனும் க்ரீம் சட்டையும் பச்சை பாவாடையும். ஆண் குழந்தைகளுக்கு க்ரீம் சட்டையும் நீல கால் சட்டையும் ஆக இருந்தது. காலங்கள் கடந்து செல்ல குழந்தைகளின் ஆதிக்கத்தால் துவக்கப்பள்ளியாகவும், உயர்தொடக்கப்பள்ளியாகவும் செயல்படத் தொடங்கியது. கல்லூரிகளிலிருந்து ப்ரீடிகிரி எடுத்து மாற்றப்பட்டதால் +1 மற்றும் +2 வகுப்புகளும் வந்து சேர்ந்தது. 2000 ஆண்டின் போது மாநிலத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவே பொதுக்கல்வி பாதுகாப்பின் பாகமாக பொது கல்விக்கூடங்களில் முன்துவக்கப்பள்ளி தொடங்க அனுமதி கிடைத்தது. நம் பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரிதும் துணையாக நெடுந்தூண்களாக இருக்கின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு முன்துவக்கப்பள்ளி அச்சுதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். 15 குழந்தைகள் ஒரு ஆசிரியர் என்ற நிலையில் துவங்கிய நமது முன்துவக்கப்பள்ளியில் தற்போது 88 குழந்தைகளும், 2 ஆசிரியைகளும், ஒரு ஆயாவும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே ஒரு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

கடந்து வந்த பாதைகள்

கலை, விளையாட்டு, அறிவியல் செயல்பாடுகளிலும் அன்று முதலே நமது பள்ளி முன்னிலையில்தான் உள்ளது. கற்றல் செயல்பாடுகளோடு நின்றுவிடாமல் துணி நெய்தல், தையல், நூல் நூற்றல், கூடை முடைதல், பாய் முடைதல் போன்ற சுயதொழில் பயிற்சியும் வழங்குவதுண்டு.

அறிஞர்கள் வந்த வழி

பயிலுகின்ற குழந்தைகள் முன்மாதிரியாக கொள்வது இங்கு படித்து சென்ற முந்தைய மாணவர்களையே தான். இப்பள்ளியில் படித்து சென்ற முன்னாள் மாணவர்களின் மக்களும், பேரக்குழந்தைகளும் இங்குதான் படித்துச் செல்கின்றனர். இவ்வாறு தலைமுறை தலைமுறைகளாக கல்வி கற்கின்றவர்களே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி மாணவர்களில் அதிகபட்சமும்.

வெற்றியின் ரகசியம்

அறிவுருவாக்கம் ஒரு சமூக செயல்பாடாகும். கற்றல் சரியான முறையில் வேண்டுமெனில் பள்ளியும், சமூகமும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும். ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிர்ணயிப்பதில் அந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிகளின் பங்கு மிக இன்றியமையாததாகும். கடந்து சென்ற பல கல்வி ஆண்டுகளின் கணக்குகள் பரிசோதித்தால் புதிய குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பிலும் வந்துசேர்கின்றனரே தவிர கல்வியில் கழிவு என்னும் நிலைமை அறவே இல்லை. இது மட்டுமன்றி ஒன்றாம் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் வந்து சேர்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கேரள மாநிலத்திலேயே இது ஒரு அபூர்வக் காட்சியாகும். இத்தகைய சிறப்புமிக்க நீண்ட வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. பல காலங்களாக இங்கே பணிபுரிந்து சென்ற சிறந்த ஆசிரியர்கள் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பெருந்துணையாகவே இருந்துள்ளனர். இப்பள்ளியின் வளர்ச்சி பண்டைக்காலம் தொட்டு தலைமுறை தலைமுறையாக கைமாறி வருவதாகும் என்றால் அது மிகையாகாது. ஆங்கில வழிக்கல்வி இல்லாமல் சிறப்பாக செயல்பட்டுவரும் பள்ளி ஒன்று என்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு.

மலரும் நினைவுகள்

நிறைய கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர், என்ஜினீயர் போன்ற உயர்தர வேலைகள் முதல் சமூகத்தின் நன்மைக்காக அடிமட்டத்தில் பணிபுரிகின்றவர் வரை ஒன்றாக அமர்ந்து படித்த வரலாற்றை இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கதையாகச் சொல்லும்.