ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஆசிரியர்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

ஆசிரியர்களின் படைப்புகள்

ஆசிரியர்களின் படைப்புகள்
வரிசை எண் ஆசிரியர்கள் படைப்புகள்
1
சுப்ரபா. எஸ்
ஆத்ம தரிசனம்

உனக்கென்று பிறருக்கு துன்பமற்ற சில வரைமுறைகளை வகுத்துக் கொள். அவை நன்மை பயப்பனவாய் இருத்தல் வேண்டும் என்பது முக்கியம். அப்போதுதான் சரியான லட்சியத்தை கண்டடைவாய். யாரைப்பற்றியும் விமர்சிக்காதே. அலசி ஆராயாதே.உள்ளுக்குள் இருக்கின்ற நன்மையின் பொறியைத் தட்டி எழுப்பு.எல்லா கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு.இல்லையென்றால் இராமாயணம் பிறந்திருக்காது. இராமாயணத்துக்கும் ஈரத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இந்த இதிகாச சிருஷ்டி கர்த்தா வால்மீகி முன்காலத்தில் இரக்கமற்ற காட்டுக்கொள்ளையனாகவும் கொலைகாரனாகவும் இருந்தவர் தானே?

இங்கு சொல்ல வந்த விஷயம் கர்மத்தைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதுதான். இப்படி செய்வதால் கிடைப்பது என்னவோ இளிச்சவாய் பட்டம்தான். ஆனால் நீ செய்வதன் பலன் வட்டியுடன் உனக்கே திரும்ப கிடைக்கும். இது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதில் என்ன ரகசியம் வேண்டியிருக்கு எல்லாரும் சொல்வது தானே என்கிறீர்களா? ஆம் ஆனால் சிறுதிருத்தம் நாளை நமக்கு இது வேறு வகையில் உதவுமே என நினைத்து நன்மை, தான தர்மம் போன்றன அனைவரும் செய்வர். அதில் மிகுந்த சுயநலமே அடங்கியுள்ளது. சுயநலம் தேவைதான். பேராசையற்றதாய் இருந்தால்.பிறரை கலங்க வைக்காததாய் இருந்தால்.

தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றதாம்.அதன்மீது பரிதாபப்பட்ட ஒரு சன்னியாசி அதைக் காப்பாற்ற எண்ணி வெளியே எடுத்துவிட்டார். அது அவரை கொட்டிவிட்டு மீண்டும் தண்ணீரில் விழுந்ததாம். மீண்டும் அவர் வெளியே எடுத்து விட்டாராம். மீண்டும் அது கொட்டிற்றாம். ஏன் இபபடி செய்கிறீர்கள்? ஏன ஒருவர் கேட்டார். அது தன் குணத்தைக் காட்டுகிறது. நான் என் குணத்தை காட்டுகிறேன் என சன்னியாசி பதில் கூறினார்.

இது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் கூறப்படுகிறது. சரிதான் நன்மை செய்.கர்ணனின் ஈகை குணம் தான் அவனை இன்றும் மனித இதயங்கள் மறக்காமல் வைத்துள்ளன. கொடுத்ததை விளம்பாதே வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது. ஏன் இப்படிச் சொன்னார்கள் கொடுக்க இயலாதோருக்கு பொறாமைப்படுதல் என்ற மனத்துன்பம் கூட வர வேண்டாம் என வைத்துக் கொள்ளலாமே.

நன்மை செய்ய பல வழிகள் உள்ளன. பொருள் கொடுத்தல், கல்வி புகட்டல்,இன்சொல் கூறுதல்,தர்மம் செய்தல்,வழிகாட்டுதல்,ஆன்மாவை திருப்திப்படுத்துதல் என பல வழிகள். மற்றவருக்கு எது சந்தோஷம் தருமோ, உனக்கு நஷ்டமில்லாமலும், சேத மற்றும், மானத்துடனும் செய்ய முடிந்தால் அதை தயங்காமல் நினைத்த உடனே செய்துவிடு.

பல நாள் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலன் கருதி நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே நீ அடையும் இன்பம்

இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.

மேலே கண்ணதாசன் கூறியபடி நடந்து பார்.எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். உடம்பு அடையும் திருப்தி நிலையற்றது. பேராசை உடையது.அடங்காதது. ஆனால் ஆத்ம திருப்தி என்பது நிலையானது. பவித்ரமானது.ஒழுக்கம் நிறைந்தது. எந்த மனிதனும் பூரணமானவன் அல்ல. ஆகவும் முடியாது. கடவுளாய் நாம் வணங்கிடும் அனைவரும் தற்கால மனிதர்கள் போல தான் இருந்தனர். ஆனால் அவர்களின் நன்மையும், நற்சிந்தையும், பக்குவப்பட்ட மனதும் தான் அவர்களை கடவுளாய் மாறியிருக்கக்கூடும். கடவுளாக யாராலும் முடியாதெனினும் மனிதனாய் வாழ தர்மம், நன்மை, உன் கடமை போன்றவற்றை சரிவர செய்து பார். ஆத்ம தரிசனம் கிடைக்கும். அங்கே கடவுள் இருப்பார்.

2
பிர்தெளஸ். க
சின்னாறு
துள்ளி ஓடும் மான்கள் 
அசைந்து நடக்கும் யானைகள்
பம்மிச் செல்லும் பன்றிகள்
பாய்ந்து ஊறும் பாம்புகள்
பதுங்கிப் பாயும் புலிகள் 
பயமில்லா காட்டெருமைகள்
மெல்ல ஊரும் ஆமைகள் 
தாவிப் பாயும் குரங்குகள் 
வானளாவிய மரங்கள் 
வஞ்சமில்லா காட்டருவிகள் 
வட்டமிடும் சிட்டுகள் 
வன்மையான மலைகள் 
ஈர்த்திழுக்கும் மனதையே
அமைதியான அரங்கமே
பசுமை மலை அழகலாம் 
இறைவன் கொடுத்த சின்னாறாம்.